Thursday, March 31, 2016

சாதியும்... உயர் கல்வியும்... 100 பில்லியன் பிஸ்னசும்!


சாதியும்... உயர் கல்வியும்... 100 பில்லியன் பிஸ்னசும்!


மிழகத்தில் அதிக அளவு இடம்பெயர்வுகள் இருக்கின்றன. பெருவாரியான மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரம், கல்வி போன்றவை அதற்கான காரணங்களாக இருந்தாலும், பிரதான காரணமாக இருப்பது தம் சாதிய அடையாளங்களை மறைப்பதற்கானதாகவே இருக்கிறது.
ஆனாலும், நகரங்களிலும் நவீன தீண்டாமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதியம் தமக்கு கிடைக்கின்ற அனைத்து வழிகளிலும் தம்மை புதுப்பித்துக் கொள்கிறது. வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியர்களுக்கு அடுத்தபடியான இரண்டாமித்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த நவீன காலங்களிலும்  இந்தியாவின் சாதி முறையானது, ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இது, நமது கல்விமுறை சாதிய பாகுபாட்டை ஒழிப்பதில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்த சூழலில்,  கல்வி வளாக வன்முறைகள் குறித்து அண்மையில் ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரை இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது. 
 

அவரின் உரையிலிருந்து....

சாதி படிநிலைகளை தற்காத்து கொள்வதற்கே, கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது :


"இந்திய மக்கள் பலர் பேசக் கேட்டு இருக்கிறோம், அதாவது, பிரிட்டிஷ் அரசு மட்டும் இங்கு வரவில்லை என்றால், நம் மக்கள் பலர் கல்வி நிலையங்களுக்குள் நுழைந்திருக்க முடியாது, கல்வி கற்று இருக்க முடியாது.  ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தியபோதே அனைத்து தீண்டாமைகளுடன்தான் அறிமுகப்படுத்தினார்கள். 

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பாராளுமன்றம், 1813-ம் ஆண்டு நிறைவேற்றிய ஒரு மசோதா, “ இலக்கியத்தைப் புனரமைப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும், அறிவு வளம் நிரம்பிய இந்தியர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களில் வாழும் மக்களிடம் விஞ்ஞான அறிவைப் புகுத்தி வளர்ப்பதற்ககவும், இந்தியாவின் அதிக வருமானங்களிலிருந்து ஆண்டுதோறும் 1 லட்சத்துக்குக் குறையாத பணத்தை ஒதுக்கி மேலே கண்ட நோக்கங்களின் பொருட்டு செலவிட வேண்டும்...” என்று வலியுறுத்தியது.
இதற்கு  இங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், " நாம் சமஸ்கிருத கல்வி கொடுப்தே போதுமானது..." என்று பதிலளித்தார்கள். அதன்பின்பு, இங்கு பல கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பு, கல்வி தொடர்பான பல அறிக்கை பரிமாற்றங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குள் நடந்தது. இந்த அறிக்கைகள் அனைத்தும், "நாம் அனைவருக்கும் கல்வி கொடுக்க தேவையில்லை. சமூகத்தில் மேற்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் கல்வி அளிப்பது போதுமானது. இதன் மூலமே நாம் அறிவார்ந்த சமூகத்தை கட்டமைத்துவிட முடியும்' என்பதாக இருந்தது. 1830ல் அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையானது,  “எண்ணிக்கையில் மிகப் பெருமளவில் உள்ள வகுப்பினரிடம் நேரடியாகச் செயல்படுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் பலனைவிட,  மேல்நிலை வகுப்புகளிடையே கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலம் சமுதாயத்தின் கருத்துகளிலும் உணர்வுகளிலும் மிகப் பெருமளவில் அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றது.”

பிரிட்டிஷ் அரசு கல்விநிலையங்களில் நிலவிய தீண்டாமை:

கல்வி அளிப்பதில் மட்டும் தீண்டாமை இல்லை. கல்வி நிலையங்களிலும் தீண்டாமை நிலவியது. அகமத் நகர் பிற்படுத்தப்பட்ட மக்கள்,  "எங்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும்" என்கின்றனர். தங்களுக்கான கல்வி நிலையத்தை ஏற்படுத்த ஆகும் செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வருகின்றனர். இதற்கு அனுமதியளித்த பிரிட்டிஷ் அரசு, அதற்கான அனுமதி அறிக்கையை இட்டாலிக் எழுத்துருவில் (italic font) எழுதியது. அதற்கான காரணமாக, "இதுபோல் அனுமதி அளிப்பது, இதுவே முதன்முறை. அதை குறிப்பிடவே, இவ்வாறு எழுதப்படுகிறது" என்று சொல்லப்பட்டது . 1855 நவம்பர்  மாதம், அகமத் நகர் வாசிகளது பங்களிப்புடன் கீழ்ச் சாதியினர் கல்வி பயில முதன்முதலாக ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. பின்பு அனைத்து பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றாக, உயர் சாதி மக்கள் படிக்க விரும்பாத காரணத்தினால், பல பள்ளிகள் மூடப்பட்டன. சில தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் உயர் சாதி மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. 

சுதந்திர இந்தியாவில் கல்வி நிலையங்களில் பாகுபாடுகள்:

கல்விக்கூடங்கள் பொதுவானவை,  சாதியுணர்வோடு சிலர் இருப்பது தனிப்பட்ட பிரச்னை என சொல்லப் படுகிறது. கல்வி அமைப்பையே சாதியப் பாகுபாட்டுடன்தான் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கி வைத்து விட்டுப் போனது. இதில் பெயரளவுக்கு கூட எவ்வித மாற்றமுமின்றி, அதனை பாதுகாப்பதற்கான முயற்சி சுதந்திர இந்தியாவில் நடந்தது, நடக்கிறது. 

பெரும்பாலும் பள்ளிகள் ஊருக்குள்தான் இருக்கும், உயர்சாதி மக்கள் குடியிருக்கும் தெருவுக்குள் அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள், எப்படி ஊருக்குள் இருக்கும் பள்ளிக்குள் செல்ல முடியும்...? சாதி கடந்து பழகாதபடி   மாணவர்கள் பிரித்தே அமரவைக்கப்படுகின்றனர். மதிய உணவு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளிலும் இது தொடர்கிறது. இது தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஆளுமை சிதைவை ஏற்படுத்துகிறது. இந்த உளைச்சலால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும்,  கற்கும் ஆர்வம் குன்றி, பள்ளிக்கு வருவது குறையவும் காரணமாக அமைகிறது. இந்த காரணங்களால், மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகி, சில சமயம் தற்கொலை முடிவுக்கே தள்ளப்படுகிறான்.  

கோட்டாவும், இட ஒதுக்கீடும்: 

 பட்டியல் இன,  பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு அருகாமை கல்லூரிகளும், மரபான படிப்புகளுமே தெரிந்திருக்கின்றன.  இவர்களுக்கு, மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் குறித்து போதிய அறிமுகமில்லை. தெரிந்திருந்தாலும், நுழைவுத்  தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகவும், அவை நகரங்களில் மட்டுமே நடப்பதாலும்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் பங்கேற்க முடிவதில்லை. 

அசோசெம் (ASSOCHAM, The Associated Chambers of Commerce of India) மதிப்பீட்டின்படி, 100 பில்லியன் ரூபாய் புழங்கும்  தொழிலாக ராஜஸ்தான் மாநிலம் 'கோட்டா' என்ற ஊரில் நடக்கும் ஐஐடி நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு  உருவெடுத்துள்ளது. ஐஐடியில் படிக்கும் நான்கில் ஒருவர் 'கோட்டா' வில் பயிற்சி பெற்றவர்கள்.   அதாவது மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள், கல்வி பெற்ற முதல் தலைமுறை பட்டியலின, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்தும், அரிதாக ஊரகப் பகுதிகளில் இருந்தும் சில மாணவர்கள் இந்த நிறுவனங்களுக்குள்  நுழைகின்றனர். சுயமான தயாரிப்பில் நுழைவுத்தேர்வு எழுதும் இவர்களது மதிப்பெண்,  தரவரிசை பின்தங்கும். எனவே இடஒதுக்கீட்டில் நுழைகிறார்கள். மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள் போதிய பயிற்சி, வழிகாட்டுதலுடன் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில்  நுழைகிறார்கள்.

பொதுப்போட்டிக்குரிய மதிப்பெண் பெற்றாலும் பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவரவர் சாதிக்குரிய இடஒதுக்கீட்டிற்குள் அடைத்துவிட்டு பொதுப்போட்டிக்குரிய  மொத்த இடங்களையும்  உயர்சாதியினருக்கு ஒதுக்கிக்கொள்ளும் மோசடி நடந்துவருகிறது. இதன் காரணமாக, மெரிட்வாலாக்கள்  திறமைசாலிகள்,  இடஒதுக்கீட்டில் நுழைகிறவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்கிற கற்பிதமான முன்முடிவு,  உயர் கல்வி நிறுவனங்களில் வலுவாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த முன் முடிவுடன்தான் தேர்வு தாள்களும் திருத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வர்த்தமான் மருத்துவக் கல்லூரியில்,  பிஸியாலஜி என்கிற பாடத்தில் மட்டும் பட்டியல் இன மாணவர்கள் திரும்பத்திரும்ப ஃபெயில் ஆகி இருக்கிறார்கள். இதில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின் நடந்த பொது தேர்வில், பங்கேற்ற 25 மாணவர்களில்  24 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  இது அப்பட்டமாக, தேர்வு தாள்கள் முன்முடிவுடன் திருத்தப்படுவதை காட்டுகிறது. 

ஏன் ரோஹித் வெமுலாக்களும் மரணிக்கிறார்கள்...?

உயர் கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு அது தரும்  பெருமிதம் மகிழ்வானதாக இருந்தாலும், தகுதி குறைந்தவர் என்பதன் பேரால் அன்றாடம் சந்திக்கிற  அவமதிப்புகள், புறக்கணிப்புகள் மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாம் செந்தில் குமார்களையும் ரோஹித் வெமுலாக்களையும் இழக்கிறோம்.

சரி தீர்வன்ன...?

சாதியை பற்றி பேசாமல், நாம் சாதியை ஒழிக்க முடியாது. சாதி ஒழிப்பு கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டும் முற்போக்காளர்களின் வேலை இல்லை. வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் சாதியின் தீமைகளை பேசுங்கள், குறிப்பாக, குழந்தைகளிடம் பேசுங்கள். அனைவரையும் சமமாக மதிக்க கற்று தாருங்கள். இப்போது பிரசாரத்தில் மூலமாக மட்டும் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. அது நிச்சயம் முடியாது. பிரசாரத்தின் மூலமாக சாதியை ஒழிக்க முடியுமென்றால், அதே பிரசாரத்தின் மூலமாக சாதியை தக்கவைத்து கொள்ள முடியும்தானே...? சாதியை ஒழிப்பதற்கு முதலில், முற்போக்காளர்கள் சாதி ஒழிப்பை தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். சாதி குறித்த கூட்ட மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். அப்போது தான் சமநிலை சமூகத்தை கட்டமைக்க முடியும். 

இவ்வாறாக இருந்தது அவரின் உரை.


- மு. நியாஸ் அகமது

ஜெயமோகன்: அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை, ஈ வே ரா வின் அணுகுமுறை

http://www.jeyamohan.in/368#.Vv3W4Jx97IU
http://www.jeyamohan.in/368

எழுத்தாளர் ஜெயமோகன்

...................ஆட்சியதிகாரத்தைக் கையாள விரும்பிய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து உருவானது.  அன்று வரி செலுத்துவோர் மட்டுமே வாக்களித்தனர். ஆகவே நிலமும், சொத்தும் வைத்திருந்த பிராமணர் வலுவான சக்தியாக இருந்தனர். அதனால் அந்த இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கமாக ஆரம்பித்து ஆட்சிக்கு முயன்ற போது ஜஸ்டிஸ் கட்சியாக ஆகியது.

சுதந்திரத்திற்குப் பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை வந்த போது, பிற பிற்பட்ட சாதியினர் எண்ணிக்கை பலம் காரணமாக அரசியல் சக்தியாக ஆனார்கள். அப்போது ஈ.வே.ராவின் இயக்கம் அவரை மீறி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் பிற பிற்பட்ட சாதியினர் இயக்கமாக ஆகியது. பிராமணர் வெறுப்பு என்ற கொடியின் கீழ் உயர் சாதி நிலப் பிரபுக்களையும், குடியானவ சாதிகளையும் இணைக்கவும், அதிகாரத்தை நோக்கி செல்லவும் அது முயன்றது. ஒரு கட்டத்தில் உயர் சாதியினர், பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கை பலத்தால் ஓரம் கட்டப்பட்டு முற்றிலும் பிற்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக அது ஆகியது. இத்தருணத்தில் ஈ.வே.ராவும் அதிகார அரசியலில் ஓரம் கட்டப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் ஒரு புனித தந்தைச் சின்னமாக ஆக்கப் பட்டார்.
தலித்துக்கள் மீதான ஈ.வே.ராவின் அணுகுமுறை இன்று தமிழ் நாட்டில் மிகக் கடுமையாக விமரிசிக்கப் படுகிறது. வரும் காலத்தில் அது மேலும் வலுப்படவே செய்யும். நடைமுறையில் ஈ.வே.ரா தலித்துக்களுக்காக ஏதும் செய்யவில்லை. அவரது ஆதரவுத் தளங்களில் இருந்த கடுமையான சாதிக் கொடுமைகளைத் தடுப்பதற்காகக் குரல் கொடுக்கவோ, திட்டவட்டமான போராட்டங்களில் ஈடுபடவோ இல்லை. பல தலித் போராட்டங்களில் அவர் எடுத்த மேம்போக்கான நிலைப்பாட்டை, இன்று தலித் சிந்தனையாளார்கள் பலர் கடுமையாக விமரிசித்தும் வருகிறார்கள் .
தமிழகத்தில் தலித்துக்கள் தங்களை நேரடியாக அடக்கி ஆண்ட பிற்படுத்தப் பட்ட  மக்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கான எந்த போராட்டத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. இந்த உண்மையை மறைக்கவே அவர் கேரளத்தில் பங்கு கொண்ட ஒரே போராட்டமான வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் பெரிது படுத்தப் படுகிறது. இங்கே கவனிக்கத் தக்கது என்னவென்றால் வைக்கத்தில் ஆலய நுழைவுக்காகப் போராடியவர்கள் தலித்துக்கள் அல்ல, பிற்படுத்தப் பட்டவர்களான ஈழவர்களே. அவர்களுடன் இணைந்தே ஈ.வே.ரா போராடினார். இந்த உண்மை இங்கே பேசப் படுவதே இல்லை.
தமிழகத்தில் ஈ..வேராவின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னரே தலித் எழுச்சி உருவாகிவிட்டிருந்தது. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அவ்வெழுச்சியின் நாயகர்கள். ஆனால் அந்த எழுச்சியை பிராமணரல்லாத உயர்சாதியினரின் பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பிணைத்தது வழியாக அதை மழுங்கடித்தார் ஈ.வே.ரா.  அவரது கொள்கைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியலதிகாரம் நோக்கிச் செல்லத் தோள் கொடுக்கும் சக்தியாக தலித்துக்களை முக்கால் நூற்றாண்டுக் காலம் நிறுத்தி வைத்தன. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துக்களை ஒடுக்குகிறார்கள் என்ற நடைமுறை உண்மையை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோஷத்தால் மூடி வைத்தது ஈ.வே.ராவின் இயக்கம்
ஈ.வே.ரா மறைந்து அரை நூற்றாண்டு கழித்து, உருவான தலித் இயக்கங்கள் தங்கள் முன்னோடிகள் நிறுத்தி விட்ட புள்ளியில் இருந்து, ஈ.வே.ரா தொடங்கிய புள்ளியில் இருந்து மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் ஈ.வே.ராவை எதிர்க்கிறார்கள். இன்று தலித் இயக்கங்கள் உருவாகி தலித் விடுதலைக்கான ‘உண்மையான‘ போராட்டங்கள் நடக்கும் போது ஈ.வே.ராவின் ஆதரவுத் தளமே அவர்களின் முதல் எதிரியாக இருப்பதையும், எவரும் காணலாம்.
தலித்துக்கள் அறிவும், விவேகமும் சற்று குறைவானவர்கள், அவர்களையும் நாம் சற்று அணைத்துப் போக வேண்டும் என்பதே அவரது பார்வையாக இருந்துள்ளது. இந்த உயர்சாதிப் பார்வையை  அவர் தவிர்த்திருக்க முடியாது, அது ஓரளவு அவரது அந்தரங்க நம்பிக்கை, ஓரளவு அரசியல் சமரச நிலைப்பாடு. அவருக்கு ஆதரவுத் தளமாக இருந்த உயர் / நடுத்தர சாதிகளின் நம்பிக்கை அது. அந்த மனப் போக்குக்கு வெளியே அவரால் அதிகம் நகர்ந்திருக்க முடியாது.
ஈ.வே.ரா அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தலித்துக்களின் வரலாற்றுக்கான ஒரு முன் வரைவு பண்டித அயோத்தி தாசரால் முன் வைக்கப்பட்டு பிற இரு தலித் தலைவர்களால் வலுவாக முன்னெடுக்கப் பட்டிருப்பதை இன்று தலித் ஆய்வாளர்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். தலித்துக்கள் தங்கள் மரபாலோ, குணத்தாலோ இழிந்தவர்கள் அல்ல என்பதே அந்த வரலாறு. அவர்கள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். நில உடைமையாளர்கள். பழைய பௌத்தர்கள். பௌத்தம் வீழ்ச்சியடைந்த போது நிலம் பிடுங்கப் பட்டு மெல்ல,மெல்ல ஒடுக்கப்பட்ட நிலை அடைந்தவர்கள். இதை அயோத்தி தாசர் ஆதாரங்களுடன் முன்வைத்து பேசியிருக்கிறார். அக்காலத்து மேலை ஆய்வாளர்களான கர்னல். ஆல்காட் போன்றவர்கள் இதை ஏற்றிருக்கிறார்கள்....................
............அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தைத் தான். அந்த விவாத களமானது அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது. அந்த விவாத களமானது தனக்கு முரண்படவும் தன்னை விரிவு படுத்திக் கொள்ளவும் இடமளிக்கிறது........ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன்..............
............பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும்....... 
முழு கட்டுரையும் படிக்க:


Wednesday, March 16, 2016

கொலையும் செய்ய துணியும் சாதி வெறியிலிருந்து தப்பிக்க...

சாதி வெறி எனும் சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:
1. இந்து மதத்தினை பின்பற்றுவதனாலேயே சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பார்த்து "நீ ஒரு தாழ்த்தபட்ட சாதியினை சேர்ந்தவன்" என்று பிற ஆதிக்க சாதியினரால் முத்திரை குத்தப்படுகிறான்.

2. இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக சாதியை ஒருவன் மாற்றவே முடியாது. மதம் வேண்டுமானால் மாறலாம்.

3. இஸ்லாம் மதத்திற்கு ஒருவன் மாறினால் மட்டுமே ஆதிக்க சாதியினர் சற்று மரியாதை தருவார்கள். "வணக்கம் பாய்","வாங்க பாய்" என்பன போன்ற மரியாதைகள் கிடைக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிய அந்த குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து தான் பின்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் என்பது அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.

4. தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்தின்படி கடைசியான/ நான்காம் வர்ணமான சூத்திர சாதியினர் என்பவர்கள் இந்து மததிலேயே இல்லாமல் போய்விடுவார்கள்.

5. இப்போது கடைசியாக இருக்கும் வர்ணமான, மூன்றாம் வர்ணமான வைசிய வர்ணத்தினர்தான் அடுத்து இருக்கும் தாழ்வான சாதியினராக இந்து மதத்தில் வாழ்வார்கள். அவர்களும் பிற உயர்சாதியினரான பிராமண மற்றும் பிற உயர் சாதியினரால் "நீ ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினன் ", என்று அவமானப்படுத்தப்பட்டால் அவர்களும் இஸ்லாம் மதத்தினையே பின்பற்ற வேண்டிய கால வரும்.

6. வெளி நாடுகளுக்குச் சென்றாவது அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் இந்த சாதிவெறி மிக்க கௌரவக் கொலை, சாதிய படுகொலை போன்ற சமூகப் பேரிழிவிலிருந்து தன்னையோ, தன் பரம்பரையையோ ஒருவன் காப்பாற்றிக் கொள்ளலாம்.

‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’_ நாடு 2200 லும் வல்லரசு ஆகாது




http://www.vikatan.com/news/coverstory/60609-arent-political-parties-guilty-of-honour-killings.art

அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி,  தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக்கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.

டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த தலித் அல்லாத ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...?

அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி,  தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக்கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.

அதனால், இயற்கையாக அதன் பிரதிநிதியாக மக்களைச் சந்திக்க இருக்கும் உங்களிடம்தான் உரையாடி ஆக வேண்டும்.
உங்களுக்கு டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...? உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அப்பா மருத்துவர்  ராமதாஸிடம்  கேட்டுப் பாருங்கள்... ஒரு வேளை அவருக்கு நினைவிருக்கலாம். அவர் தலைமையில், கோவையின் மையப்பகுதியில் ஒரு ஆடம்பர விடுதியில் நடந்த கூட்டம் அது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த கூட்டம். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். அமைப்பினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. நானும், கோவையைச் சேர்ந்த இன்னொரு ஊடகவியலாளரும் மட்டுமே, கட்சிக்காரர் தோரணையில் சென்றதால், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். அந்தக் கூட்டத்தில் உங்கள் அப்பா, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தூவிய வன்ம விதைதான், இப்போது வரிசையாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

தயவு செய்து மறுக்காதீர்கள். ’என் அப்பா எதுவும் அப்படி பேசி இருக்க மாட்டார். அவரே, பல சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்தவர்; தாழ்த்தப்பட்டவருக்கு பாதுகாவலர்!’ என்று வழக்கமான உங்கள் பாணியில் நீட்டி முழக்காதீர்கள். அந்த நிகழ்ச்சியின் முழு ஆடியோவும் கைவசம் இருக்கிறது. நீங்கள் விரும்பினால், அதை விகடன் இணையவெளியில் பதிவேற்றத் தயாராகவே இருக்கிறோம்! உள் அரங்கக் கூட்டம்தானே என்ற மிதப்பில், உங்கள் அப்பாவும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களும் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை!
தென்மாவட்டத்தைச் சார்ந்த சாதிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர், ராமதாஸை நோக்கி, “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். நம்ம வந்தா இடுப்புல துண்டு கட்டுற பயலுவோ... சைக்கிளைத் தள்ளிட்டுப் போற பயலுவோ.... (இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகள்) எல்லாம், இன்னைக்கு நமக்கு சரிசமமா நிக்கிறானுங்கன்னா... அதுக்கு நீங்கதான் காரணம்... நீங்க கூட்டணி சேர்ந்து தைரியம் கொடுத்தீங்க... இன்னைக்கு நமக்கு எதிராவே வளர்ந்து நிக்கிறாங்க....” என்றார்.
  
அதற்கு உங்கள் அப்பா, என்ன சொன்னர் தெரியுமா..? “ஆம். தவறு செய்துவிட்டேன். இனி எக்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது...” என்றார். உங்கள் அப்பாவின் முற்போக்கு முகமூடி கிழிந்து கந்தலாக பரிதாபமாக தொங்கியது அன்று. அரசியலுக்காக, எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டீர்கள், சமூகநீதி கொள்கைகளை எல்லாம் வாக்கிற்காக பலியிட முடிவுசெய்துவிட்டீர்கள் என்பதை அறிந்தேன்.


மாற்றம், முன்னேற்றம், எப்போது நத்தம் காலனி...?

வளர்ச்சியின் நாயகனாக உங்களைச் சித்தரிக்க விரும்பும் அன்புமணி அவர்களே,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த, பத்திரிக்கையாளர் சந்திப்பு நினைவிருக்கிறதா..? ’இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது... எப்படி நினைவிருக்கும்?” என்று கேட்கிறீர்களா...! சரிதான்.. அதையும் நானே நினைவுபடுத்துகிறேன். உங்களிடம் அப்போது ஒரு வினா எழுப்பப்பட்டது, “நீங்கள் வாக்கு கேட்க நத்தம் காலனி செல்வீர்களா...?” என்று. அப்போது நீங்கள் தீர்க்கமாக கூறிய பதில், உங்கள் மீது ஒரு சின்ன நம்பிக்கையை விதைத்தது. “நிச்சயம் செல்வேன். அதுவும் தருமபுரி தொகுதிக்குள்தானே இருக்கிறது... நான் அனைத்து சமூக மக்களுக்குமான பொது வேட்பாளர்..!”

ஒருவேளை இதை நீங்கள் மறந்திருந்தால், அப்போது உங்கள் அருகில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து பா.ம.கவுக்கு வந்தவருமான மருத்துவர் செந்திலிடம் கேளுங்கள். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? நீங்கள் கடைசி வரை நத்தம் காலனி செல்லவில்லை. நத்தம் காலனிக்கு பக்கத்து ஊரான செல்லாம்கொட்டாய் வரை வந்த நீங்கள், நத்தம் காலனி பகுதிக்கு செல்லவே இல்லை. ஏன்...? அந்த மக்களின் வாக்கை தீட்டாக கருதிவிட்டீர்களா?

“அப்படியெல்லாம் இல்லை... அப்போது அரூர் அருகே என் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அது போல் அசம்பாவிதங்களை தவிர்க்கவே நான் செல்லவில்லை...” என்கிறீர்களா...?. ஆனால், நீங்கள் வெற்றி பெற்ற பிறகும், நீங்கள் இதுநாள் வரை செல்லவில்லையே அன்புமணி. அதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்...?


உங்கள் உரைகள் வளர்ச்சி குறித்து இருக்கிறது, தனிப்பட்ட முறையில் உங்களுடனான உரையாடல்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, ஆனால், பண்பாட்டு தளத்தில் உங்களது கருத்துகள் சூனியமாக இருக்கிறதே..! சங்கரின் படுகொலைக்கு நீங்கள் நேரடியாக காரணமில்லை. ஆனால், “சாதிய வன்முறைகளுக்கு பின் நடந்த தருமபுரி பாராளுமன்ற தேர்தலில், நீங்கள் பெற்ற வெற்றி கொடுத்த தைரியம்தான், இது போன்ற சாதிய தாக்குதல்கள் பரவக் காரணம்” என்றொரு குரல் ஒலிக்கிறதே... அதை உங்களால் கேட்க முடிகிறதா...?


உங்கள் மீதுள்ள களங்கத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...? குறைந்தபட்சம் நத்தம் காலனி மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையாவது பெறுங்கள். அதுவே, பொது சமூகம் உங்களை நம்ப போதுமானதாக இருக்கும்!


நாங்கள் பெரியார் பாதையில் நடப்பவர்கள்:
      
மீண்டும், டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டத்திற்கே வருகிறேன். அந்த கூட்டத்தில் ஒருவர், “நான் பெரியாரை தலைவனாக ஏற்றுக் கொண்டவன். ஆனால், இது போன்ற சாதி மறுப்பு திருமணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது...” என்று தன் உரையை துவங்கினார். அந்த உரையில் வெறும் வார்த்தைகள் மட்டும் நிரம்பி வழியவில்லை, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிட அரசியலின் தோல்வி, அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெறித்தது.


பெரியாரை திராவிட இயக்கங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது என்பதற்கு இது சான்று... பெரியார் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அவர் சாதி மறுப்பு கொள்கையில் மிக தெளிவாக இருந்தார். இன்று அவர் வழி வந்த இரண்டு திராவிட கட்சிகளும், அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறதா...?


    இன்றும் தன் வேட்பாளர் தேர்வு படிவத்தில், அதற்கான நேர்காணலில், தி.மு.க சார்பாக போட்டியிட விரும்புபவர் என்ன சாதி என்பது பிரதானமான கேள்வியாக இருக்கிறது. பெரியார் கொள்கைகளைப் பரப்புவதும், சாதியற்ற சமூகத்தை உருவாக்குவது எல்லாம், இவர்களின் எண்ணம் அல்ல. சாதிய அரசியலை நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஊக்குவிப்பது... அதன் மூலம், தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், தயவு செய்து பெரியார் படத்தை உபயோகிப்பதையாவது நிறுத்துங்கள் திரு. கருணாநிதி அவர்களே!

நேரடியான சாதிய அமைப்புகளை விட நீங்கள்தான் ஆபத்தானவராக இருக்கிறீர்கள். ஆம். அமைதியை, சமத்துவத்தை விரும்பும் பொது சமூகம், சுலபமாக சாதியக் கட்சிகளை எந்தக் குழப்பமுமின்றி தன் இடதுகையால் தள்ளிவிட முடியும். ஆனால், முகமூடி அணிந்திருக்கும் உங்களை என்ன செய்வது...?
"நாங்கள் சமூக நீதிக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கிறோம் தெரியுமா...? எதற்கெடுத்தாலும் தி.மு.க வை விமர்சனம் செய்யாதீர்கள், சாதி ஒழிய வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்” என்கிறீர்களா..? ஆம், சரிதான். ஆனால் அந்த மாற்றம் வர என்ன செய்து இருக்கிறீர்கள். எந்த தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை அறிந்து சீட்டு கொடுப்பதில் நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா...?

இளவரசன், கோகுல்ராஜ்... இப்போது சங்கர். இளவரசனின் மரணத்தை தற்கொலையென்றாகிவிட்டது. சரி. மிச்சம் உள்ள கோகுல்ராஜ், சங்கர் படுகொலைக்கு எதிராக நீங்கள் நடத்திய போரட்டம் என்ன...? இல்லை, உங்கள் தேர்தல் அறிக்கையிலாவது ஏதேனும் குறிப்பு, அறிவிப்பு இருக்கிறதா....?

உங்கள் கூட்டணியில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்த அவதூறுகள் போதும், நீங்கள் எவ்வகையிலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வரலாறு பதிவு செய்ய!


ஜெயாவின் கைகளில் குருதி நாற்றம் :

சங்கரை பட்டப்பகலில் கொன்றவர்கள், எந்தப் பதற்றமும் இல்லாமல் வண்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் தம் முகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவ்வளவு நெஞ்சுரத்தை அவர்களுக்குத் தந்தவர்கள் யார்...? சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் மட்டுமா..? இல்லை. நிச்சயம் இல்லை. இந்த ஆட்சியாளர்களும், அவர்களது மெளனமும்தான் பிரதான காரணம்.


கடந்த நான்காண்டுகளாக ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது குறித்து இதுநாள் வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதவராகத்தான் இருக்கிறார் ஜெயலலிதா.


கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்ததாக ஒரு புள்ளிவிபரம். ஆனால், இந்த ஆட்சியில் எந்த ஆணவக் கொலையும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம். 

யாரை ஏமாற்ற எண்ணுகிறது இந்த அரசு...?
கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜை கைது செய்ய வக்கற்ற இந்த அரசின் கையாலாகாத தன்மை தான், ’வாட்ஸ் அப்’ தீவிரவாதி யுவராஜை கதாநாயகனாக பல 100 இளைஞர்கள் வரித்துக் கொள்ள காரணமாக அமைந்தது. ஆணவக் கொலைகள் குறித்து பெருமையாக முகநூலில் கருத்துகள் பதிய வைத்தது. அதன் தொடர்ச்சிதான் சங்கரின் கொலை. ஆந்திரா திருடர்களைக் கூட விரட்டியடித்துவிட்டதாக முன்னர் புளங்காகிதப்பட்ட ஜெயலலிதா, இந்த உள்ளூர் ஆணவக் கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்ச வேண்டும்? 

கடைசியாக சாமானியன் ஆகிய நமக்கு:

நமது ஆன்மாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருகின்றன. நாம் நமக்கே தெரியாமல் ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்கி வருகிறோம். அந்த வக்கிரமான சமூகத்தில்தான் நாளை நம் குழந்தைகள் உலவ விருக்கின்றன. நாளை, குருதி ஆற்றின் கரையோரத்தில் நம் குழந்தைகள் செய்வதறியாது நிற்பதை நாம் விரும்பவில்லை என்றால், சாதிய ஆணவக் கொலைக்கு எதிராக நம் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்வோம்! 

#‎TNHonourkilling‬

- மு. நியாஸ் அகமது

 

Tuesday, March 15, 2016

உடுமலை சங்கர் தேவர் சமூக சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. இன்று (13/3/2016) ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் சமுகத்தை/சாதியை சேர்ந்த சங்கர், பழனியைச் சேர்ந்த தேவர் சாதியில் பிறந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேவர் சமூகத்தை சேர்ந்த பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2016) உடுமலை பேருந்து நிலையம் அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென அரிவாள்கள் மூலம் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். பிறகு அந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமெராவில் பதிவாகியுள்ளன.

அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
கத்தியால் வெட்டுண்டு படுகாயமடைந்த சங்கர் மற்றும் கவுசல்யாவுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சங்கர் இறந்துவிட்டார். கவுசல்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சாதிக்கு வெளியே காதலித்த தலித் இளைஞர்களான தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் வரிசையில் உடுமலைப்பேட்டை சங்கரின் உயிரும் சாதிக்கு வெளியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காகவே பறிக்கப்பட்டதா என்கிற விவாதம் மீண்டும் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

14/3/2016_கவுல்யாவின் தந்தை சின்னச்சாமி தேவர் நீதிமன்றத்தில் சரண்:
தமிழகம், உடுமலைப் பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் ஷங்கர் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி தேவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இருந்தபோதும் இந்தக் கொலைக்கும் சின்னசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சின்னச்சாமி தேவரை மார்ச் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்களை திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தனிப்படைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு கோரியுள்ளன.
இதனிடையே, உடுமலைப்பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் தந்தை வேலு, இது திட்டமிடப்பட்ட கொலை தான் என செய்தியாளர்களிடம் உறுதியாக குற்றம் சாட்டினார்.
பெண்ணின் குடும்பத்தார் பலமுறை மிரட்டல் விடுத்துவந்ததாக குறிப்பிட்ட அவர், பொறியியல் மாணவரான தமது மகனின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.
சங்கரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
கௌரவக் கொலைகளை தடுக்கவும் ஜாதி ரீதியான கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
14/3/2016_ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பதிலளிக்க மறுப்பு:
இதனிடையே, இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.


15/3/2016_ தலித் இளைஞர் சங்கர் கொலை தொடர்பானவர்கள் கைது என காவல்துறை தகவல்:

பெரும்பாலான குற்றவாளிகள் கைதாகியுள்ளதாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது விவரங்களை உடனடியாக வெளியிடப் போவதில்லை என்றும், அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.
மேலும் அவர்களின் வாக்குமூலங்களை பெறுவது, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர இதே வழக்கு தொடர்புடைய வேறு சிலரை காவலில் எடுத்துள்ளதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பலியாகியுள்ள சங்கரின் மனைவி கவுல்யாவின் தந்தை சின்னச்சாமியின் நண்பர்கள் நால்வரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது தொடர்பான அரசியல் கட்சிகளின் கண்டன குரல்களும் வலுப்பெற்றே வருகின்றன.
15/3/2016_ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செவ்வாய்கிழமை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பேச மறுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செவ்வாய்கிழமை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்றுமே காதல் திருமணத்தை எதிர்த்தது இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
தி.மு.க., காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நல கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசையே குற்றம் சாட்டிவருகின்றன.
இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Monday, January 25, 2016

தெளிவுகள் சந்தேகங்கள் கேள்விகள்?

இந்தியா என்ற நாடு என்பது எப்பொழுதிலிருந்து இருக்கிறது?
இந்திய நாடு என்றால் எது?
இந்தியா நாட்டின் எல்லைகள் எவை?
இந்தியா நாட்டின் எல்லைகள் இவை_ என்பது எப்பொழுதிலிருந்து எற்படுத்தப்பட்டது?
இந்திய நாடு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
இந்திய நாடு என்பது எங்கு முடிகிறது?
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறதா?
இந்து மதம் என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் என்ன?
இந்து மதம் என்று பெயர் வைத்தவரின் ஜெயந்தி விழா என்றைக்கு வருகிறது?
இந்து மதம் என்ற பெயரில் எத்தனை வருடமாக இருக்கிறது?
இந்து மதம் என்றால் என்ன?
இந்து மதத்தின் கொள்கைகள் என்ன?
இந்து மதத்திற்கென தத்துவம் ஏதாவது இருக்கிறதா?
இந்து மதக் கடவுளுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உருவம் உண்டா?
இந்து மதத்தின் கடவுள்/கடவுள்கள் யார் யார்?
இந்து மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்டதா? அல்லது பல கடவுள்கள் கொள்கை கொண்டதா?
இந்து மதக் கடவுள்களுக்கிடையே உறவு முறைகள் உள்ளனவா?
இந்து மதத்தின்படி மனிதர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின் படி அனைத்து மனிதர்களும் ஒரே கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணா அல்லது பெண்ணா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுளின் பெயர் என்ன?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணைமட்டும் உருவாக்கினாரா அல்லது பெண்ணையும் உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் மனித ரூபத்தில் இருப்பவரா?
இந்து மத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் தானே மனிதனை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண்ணின் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் என்ன பெயர் கொண்ட வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினார்?
இந்து மதம் மனிதர்களுக்கிடையே வர்ணங்களை அதாவது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளதா?
இந்து மதம் மனிதர்களை அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி வைத்து அந்த வேறுபாட்டில் ஏற்றத் தாழ்வுகளை புகுத்துகிறதா?

இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்கள் யார்யார்?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்களிடையே எதேனும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது?
இந்து மதம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் படைத்ததா?
இந்து மதக் கடவுள்களே மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் படைத்தார்களா?

ஆதிகாலத்தில் ஒரு நாட்டினை கட்டமைக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்கள் கீழ்வரும் நான்கில் ஒரு நிலையிலேயே அடங்கி விடுபவர்களா?
ஆம், இல்லை அதற்கான விளக்கம்.
1. வைதிக அந்தணர்கள்/ பிராமணர்கள்
2. நாட்டைக் காக்கும் போர் தொழில் புரியும் சத்திரியர்கள்
3. விவசாயம்/ உற்பத்தி / தொழில்/ வியாபாரம் செய்யும் வைசியர்கள்
4. மற்ற அனைவருக்கும் ஏவல்/ சேவகம் செய்யும் சூத்திரர்கள்

இந்து மதத்தில் உயர்ந்த மானுட வர்க்கத்தினர் என்று யாராவது இருக்கிறார்களா?
இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?

இந்த மானுட நிலைமையானது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இருக்கிறதா?

இந்து மதத்தில் சைவம், அசைவம் போன்ற உணவு வேறுபாடுகள் உள்ளனவா?
இந்து மதத்தில் உயர்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?
இந்து மதத்தில் தாழ்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?


இந்து மதம் என்பது பிராமண குலத்தவர்களின் நிறுவனமா?
இந்து மதம் என்பது பிராமணர குலத்தவர்களின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இயங்குகிறதா?
பிராமண குலத்தவர்களில் பிரிவுகள் காணப்படுகின்றனவா?
பிராமணர்களில் ஐயர் பிரிவை விட ஐயங்கார் பிரிவினர் உயர்வாக மதிக்கப்படுகின்றனரா?
ஐயர்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
ஐயங்கார்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
இந்து மதத்தின் அனைத்து விஷயங்களையும் பிராமண குலத்தினர்தான் 
கட்டுப்படுத்துகின்றனரா?

Sunday, January 24, 2016

சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:

2016 திருநாள் கொண்டச்சேரி,
நாகப்பட்டினம் மாவட்டம்
சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:
1. இந்து மதத்தினை பின்பற்றுவதனாலேயே சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒருவன் "நீ ஒரு தாழ்த்தபட்ட சாதியினை சேர்ந்தவன்" என்று பிற சாதியினரால் முத்திரை குத்தப்படுகிறான்.
2. இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக சாதியை ஒருவன் மாற்றவே முடியாது. மதம் வேண்டுமானால் மாறலாம்.
3. இஸ்லாம் மதத்திற்கு ஒருவன் மாறினால் மட்டுமே ஆதிக்க சாதியினர் சற்று மரியாதை தருவார்கள். "வணக்கம் பாய்","வாங்க பாய்" என்பன போன்ற மரியாதைகள் கிடைக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்த குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து தான் பின்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் என்பது அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.
4. தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்தின்படி கடைசியான/ நான்காம் வர்ணமான சூத்திர சாதியினர் என்பவர்கள் இந்து மததிலேயே இல்லாமல் போய்விடுவார்கள்.
5. இப்போது கடைசியாக இருக்கும் வர்ணமான, மூன்றாம் வர்ணமான வைசிய வர்ணத்தினர்தான் அடுத்து இருக்கும் தாழ்வான சாதியினராக இந்து மதத்தில் வாழ்வார்கள். அவர்களும் பிற உயர்சாதியினரான பிராமண மற்றும் சத்திரிய சாதியினரால் "நீ ஒரு தாழ்த்தபட்ட வைசியன்", என்று அவமானப்படுத்தப்பட்டால் அவர்களும் இஸ்லாம் மதத்தினையே பின்பற்ற வேண்டும்.
6. வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்றும் இந்த சமூகப் பேரிழிவிலிருந்து தன்னையோ, தன் பரம்பரையையோ ஒருவன் காப்பாற்றிக் கொள்ளலாம்.


2016 திருநாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்
சமூகப் பேரிழிவு!
ஆனந்த விகடன்- தலையங்கம் (Jan 20, 2016)

நாகப்பட்டினம் மாவட்டம் திருநாள் கொண்டச்சேரி என்ற கிராமத்தில், இறந்துபோன தலித் முதியவர் ஒருவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினரின் சாதித் திமிரும், இந்த அநீதிக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற அரசின் அதிகாரத் திமிரும் நவீனத் தீண்டாமையின் கோர முகங்கள். இந்தியாவின் எத்தனையோ கிராமங்களைப் போல, திருநாள் கொண்டச்சேரியும் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்துதான் இருக்கிறது. செத்த பிறகும் ஒட்டியிருக்கும் திமிர் சாதிக்கு மட்டுமே இருப்பதால், ஊருக்கும் சேரிக்கும் தனித்தனியே சுடுகாடு. அங்கே சேரி சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. 

இறந்தவர்களின் உடலை வயல் வரப்புகளின் வழியேதான் தூக்கிச் செல்ல வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்ல பொதுப்பாதை இருக்கிறது. ஆனால் அதன் வழியே செல்ல, ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பது இல்லை. கடந்த நவம்பர் மாதம் 26ம்தேதி குஞ்சம்மாள் என்ற மூதாட்டி மரணம் அடைந்தார்.


மழை நேரச் சகதியில் வயல், வரப்புகளின் வழியே பிணத்தைத் தூக்கிச் செல்வது சிரமம் என்பதால், பொதுப் பாதையில் செல்ல தலித்கள் முயல… ஆதிக்கச் சாதியினர் அதை ஏற்கவில்லை. பதற்றம் உருவாகி, போலீஸ் குவிக்கப்பட்டு, இறுதியில் "எப்போதும் ஊர் 
வழக்கம்போல வரப்பின் வழியே தூக்கிச் செல்லுங்கள்" என தீர்ப்பு சொன்னார்கள் சட்டத்தின் காவலர்களான காவல்துறையினர்.இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி குஞ்சம் மாளின் கணவர் செல்லமுத்து இறந்துபோனார். பொதுப்பாதையில் விடமாட்டார்கள் என்பது தெரிந்ததால், செல்லமுத்துவின் பேரன் உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். "பொதுப் பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.


ஆனால், சாதிவெறிக்கு முன்னால் நீதிமன்றம் எம்மாத்திரம்? சட்டம் பெரியதா… சாதி பெரியதா என்றால், சாதியே பெரியது என்பதை மறுபடி ஒருமுறை நிரூபித்தார்கள் திருநாள் கொண்டச்சேரியின் ஆதிக்கச் சாதியினர். இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் செயல்படும் அவர் களின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டிய காவல்துறையோ, பொக்லைன் மூலம் புதியபாதை அமைத்து, "இதன் வழியே சடலத்தை எடுத்துச் செல்லுங்கள்" என்றது. சாதிப் பாகுபாட்டைக் கலைவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், தீண்டாமைச் சாலை அமைத்து சாதிவெறியை மேற்கொண்டும் உறுதிப்படுத்தும் வேலையைச் செய்தது காவல்துறை.


அந்தச் சாலையில் செல்ல மறுத்து, பொதுப்பாதையின் வழியே செல்வதற்கு தலித்கள் முயல… அவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, "சமூக அமைதியைச் சீர்குலைத்ததாக" 50 தலித் களைக் கைது செய்திருக்கிறது.மனித மாண்புகளுடன் வாழ அனுமதிக்காத இந்த அநீதியான சாதிவெறி அமைப்பு, கண்ணியமான மரணத்துக்கும் தடையாக நிற்கிறது. இதை அகற்ற வேண்டிய அரசின் காவல் துறையோ, நீதிமன்ற உத்தரவையே காலில் போட்டு நசுக்கி,சாதி காக்கிறது. 
2016 திருநாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்

சாதியைப் பயன்படுத்திக் கொள்வதில் புதிய புதிய நுட்பங்களைக் கையாளும் அரசியல்கட்சிகளும் அரசும், சாதியை ஒழிக்க ஒரு வழி கண்டறியும் என நம்புவதற்கு இனி இடம் இல்லை.

மனிதகுல வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் சாதியை, நாம்தான் தூக்கித் தூர வீச வேண்டும். ஏனெனில் கழிவைச் சுமந்துகொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது!-

ஆனந்தவிகடன் தலையங்கம் (20-1-16)