Tuesday, March 15, 2016

உடுமலை சங்கர் தேவர் சமூக சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. இன்று (13/3/2016) ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் சமுகத்தை/சாதியை சேர்ந்த சங்கர், பழனியைச் சேர்ந்த தேவர் சாதியில் பிறந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேவர் சமூகத்தை சேர்ந்த பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2016) உடுமலை பேருந்து நிலையம் அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென அரிவாள்கள் மூலம் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். பிறகு அந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமெராவில் பதிவாகியுள்ளன.

அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
கத்தியால் வெட்டுண்டு படுகாயமடைந்த சங்கர் மற்றும் கவுசல்யாவுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சங்கர் இறந்துவிட்டார். கவுசல்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சாதிக்கு வெளியே காதலித்த தலித் இளைஞர்களான தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் வரிசையில் உடுமலைப்பேட்டை சங்கரின் உயிரும் சாதிக்கு வெளியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காகவே பறிக்கப்பட்டதா என்கிற விவாதம் மீண்டும் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

14/3/2016_கவுல்யாவின் தந்தை சின்னச்சாமி தேவர் நீதிமன்றத்தில் சரண்:
தமிழகம், உடுமலைப் பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் ஷங்கர் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி தேவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இருந்தபோதும் இந்தக் கொலைக்கும் சின்னசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சின்னச்சாமி தேவரை மார்ச் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்களை திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தனிப்படைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு கோரியுள்ளன.
இதனிடையே, உடுமலைப்பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் தந்தை வேலு, இது திட்டமிடப்பட்ட கொலை தான் என செய்தியாளர்களிடம் உறுதியாக குற்றம் சாட்டினார்.
பெண்ணின் குடும்பத்தார் பலமுறை மிரட்டல் விடுத்துவந்ததாக குறிப்பிட்ட அவர், பொறியியல் மாணவரான தமது மகனின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.
சங்கரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
கௌரவக் கொலைகளை தடுக்கவும் ஜாதி ரீதியான கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
14/3/2016_ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பதிலளிக்க மறுப்பு:
இதனிடையே, இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.


15/3/2016_ தலித் இளைஞர் சங்கர் கொலை தொடர்பானவர்கள் கைது என காவல்துறை தகவல்:

பெரும்பாலான குற்றவாளிகள் கைதாகியுள்ளதாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது விவரங்களை உடனடியாக வெளியிடப் போவதில்லை என்றும், அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.
மேலும் அவர்களின் வாக்குமூலங்களை பெறுவது, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர இதே வழக்கு தொடர்புடைய வேறு சிலரை காவலில் எடுத்துள்ளதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பலியாகியுள்ள சங்கரின் மனைவி கவுல்யாவின் தந்தை சின்னச்சாமியின் நண்பர்கள் நால்வரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது தொடர்பான அரசியல் கட்சிகளின் கண்டன குரல்களும் வலுப்பெற்றே வருகின்றன.
15/3/2016_ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செவ்வாய்கிழமை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பேச மறுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செவ்வாய்கிழமை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்றுமே காதல் திருமணத்தை எதிர்த்தது இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
தி.மு.க., காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நல கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசையே குற்றம் சாட்டிவருகின்றன.
இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment