இந்தியாவை அலறவைத்த அந்த நாள்..!
திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள்.
1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம்
தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார்.
தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர்.
மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…
‘நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு.
‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க.
நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க.
அது எதுவும் உண்மை இல்லை.
நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான்.
ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம்.
ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
"நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம்.
கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை.
‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க
படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது.
ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது.
– அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமானவார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம்.
இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”
மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
-ஆனந்த விகடன்
* இந்து மதத்தில் தீண்டாமை இன்னும் 50000 வருடமானாலும் ஒழியாது. இந்துமதத்தின்படி நான்காம் வர்ணமான இன்றைய தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன் எத்தனை ஆயிரம் வருடமானாலும் தாழ்த்தப்பட்டவனாகத்தான் பிறப்பான். அவன் இந்து மதத்தில் தொடர்ந்து வாழ்வானேயானால் தாழ்த்தப்பட்டவனாகவேதான் இறப்பான்.
* தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீட்டினால் வேண்டுமானால் படிப்பு, வேலை ஆகியன கிடைக்கலாமே தவிர, மானமரியாதை கொடுக்க ஆதிக்க சாதியினருக்கு மனமே வராது என்பதுதான் நிதர்சனமாகும்.